Tuesday, December 30, 2008

ரஜினியும் எந்திரப் பயணமும்



ரஜினியும் எந்திரப் பயணமும்

நான் சில நேரங்களில் யோசித்ததுண்டு, என்னடா இந்த மனுஷனுக்கு இந்த நாட்டுல தலைக்கு மேல ஏகப்பட்ட வேலை இருக்கே, ஆனா இவரு பாட்டுக்கு எந்திரன் அது இதுன்னு எல்லாம் போயிட்டு இருக்காரே; எப்போதான் இங்கே நேரடியா வந்து நம்ம எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரோ? அப்படின்னு..

ஆனால் இப்பொழுது ஒவ்வொன்றாக நடக்குற விஷயங்களை பார்க்கும்போது அவர் செய்வது எல்லாம் எவ்வளவு தெளிவான விஷயம் என்று தெரிகிறது.. தான் இருக்கும் துறையில் முதலில் நல்ல விதமாக மிகச்சிறந்த சாதனையை செய்து தன்னை நிரூபித்து அதன் பிறகே அடுத்த இடத்துக்கு நகர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதை உணர முடிகிறது..

அவர் ஒரு சாதனையை செய்தால் அதை அவர்தான் முறியடிக்க முடியும் என்ற நிலை எப்போதோ தோன்றி விட்ட பிறகும், இன்னும் அந்த உயரத்தை எவ்வளவு மேல உயர தூக்கி வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் வைத்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைக்கிறார் என்பது தெரிகிறது...

ஒரு தமிழ் நடிகர், தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் நம்பர் ஒன் ஆக வீற்று இருப்பதே பெரிய விஷயம்.. வட இந்தியாவிலும் வாகை சூடியாகி விட்டது.. வெளி நாடுகளிலும் மாபெரும் வரவேற்ப்பை ருசித்தாகிவிட்டது... இன்னும் என்ன பாக்கி என்று நினைத்த போது, இல்லை இது மட்டும் இல்லை.. "நான் இருக்கும் தமிழ் சினிமாவை எப்பாடு பட்டாவது சிகரத்தில் ஏற்றி, ஹாலிவுட்டை திரும்பி பார்க்க வைப்பேன் என்ற உள் மன லட்சியத்தில்தான் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறார் (இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இதை அவர் ஒருபோதும் வாயால் சொல்லிக் கொண்டதே இல்லை)...

ஒரு மனிதன், தான் செய்யும் வேலையில் முதலிடம் பெற்று, பிறரை அரவணைத்து, தான் முதலில் கரடு முரடான பாதையை துணிச்சலுடன் தாண்டி தனக்கு பின்னால் வரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு ஒரு இலகுவான வழியை ஏற்படுத்தி விட்டு ஒன்றுமே தெரியாத சாதாரண வழிப்போக்கன் போல் அமைதியாக அமர்ந்து மற்றவர்களை மகிழ்ச்சியுடன் பார்க்கும் பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை... ஆனால் அவன் போட்டுக்கொடுத்த ராஜபாட்டையை பயன்படுத்தி சுகமான யாத்திரையை மேற்கொண்ட, அல்லது மேற்கொள்ளப் போகும் பல யாத்ரிகர்கள் இதற்க்கு வேர்வை சிந்தியவனை நன்றியுடன் நினைத்தால்தான் அவர்களால் செல்லும் இடத்துக்கு ஒழுங்காய்ப் போய்ச்சேர முடியும்..

மற்றவர்கள் பணத்தை பணயமாக வைக்கலாம்... ஆனால் இந்த மனிதன் ஒவ்வொரு முறையும் இத்தனை வருட உழைப்பையும், பேரையும் பணயமாக வைக்கிறான்..

மற்றவர்கள் திமிராக நடந்து அதல பாதாளத்தில் விழும்போதும், சில நேரங்களில் கை கொடுக்க வந்தவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விழும்போதும் சாதாரணமாக பார்க்கும் வஞ்சக உலகம், இந்த நல்ல மனிதன் அடுத்தவனை காப்பாற்ற கைகொடுக்கும் போது சற்றே கால் பிசகி துடிக்கும் போது கை கொட்டி சிரிக்கிறது...

பார்க்கின்ற பார்வையாளர்களான நமக்கு வலிக்கிற போதும், இந்த மனிதன், கை கொட்டி சிரிப்பதையும், கை தட்டி பாராட்டுவதையும் ஒன்றாகப் பார்க்கும் பக்குவம் பெற்று விட்டான்..

ஒன்று நிச்சயம்.... இந்த பயணத்திலும் அவன் நிச்சயம் தடைகளைத்தாண்டி தடம் பதிக்கப் போகிறான்..

நாம் மென்மேலும் வேறு விடைகளை வேண்டி வடம் பிடிக்க போகிறோம்...

அன்புடன்

ஈ ரா

Tuesday, December 16, 2008

ரஜினி சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்தால்....




தற்சமயம் பேமசாக உலா வந்து கொண்டிருக்கும் sms ஐ சற்று பில்ட் அப் செய்து உங்களுக்கு தருகிறேன்....


ரஜினி சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்தால்....பின் வரும் பன்ச் டியலாக்குகள் இருக்குமா?


சும்மா தமாஷு..


"J to the A to the V to the A - JAVA" தீம் மியூசிக்


"அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க... அண்ணாமலை நான் படிச்சதெல்லாம், அறிவை வளர்க்கும், கோபாலுங்க.." டைட்டில் சாங்


"கண்ணா வைரசுங்க தான் கூட்டமா வரும், ஆன்டி வைரஸ் சிங்கிளாதான் வரும்"


"C க்கு அப்புறம் C++ எனக்கு அப்புறம் No++ "


"செல்லம், நான் பார்க்கத்தான் ஹார்ட்வேர் மாதிரி இருப்பேன் ; ஆனா என் மனசு சாப்ட்வேர் தான்"


கண்ணா, கீபோர்ட் - மௌசு - பவர் கனெக்டர் பின்னாடி சிபியு போக கூடாது, சிபியு பின்னாடிதான் இந்த கனெக்டர் எல்லாம் வரணும்..இதெப்படி இருக்கு?...


அதிகமா கோட் எழுதின ப்ரோக்ராம்மரும், அதிகமா சீன் போட்ட டீம் லீடரும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல ...


கண்ணா நீ விரும்பற கிளையண்ட விட உன்ன விரும்புற கிளையன்ட் இருந்தா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்....


உன் மவுசு உன் கையில்..


நான் எப்போ login பண்ணுவேன், எப்படி login பண்ணுவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா login பண்ண வேண்டிய நேரத்தில கரெக்டா பண்ணிடுவேன் ...

தம்பிங்களா, நீங்க நூறு பேரு சேர்ந்தாலும், ஒரு மெஷின அப் பண்ண முடியாது,, ஆனா நான் ஒரு மெஷின அப் பண்ணினா நூறு மெஷின அப் பண்ண மாதிரி..


யாரும் என்ன ஸ்வைப் பண்ண சொல்லி கட்டாயப் படுத்தவும் முடியாது, அப்படி நான் ஸ்வைப் பண்ணினா யாரும் தடுக்கவும் முடியாது..


கண்ணா நீ இங்க வேணா டெலிவரி மேனேஜரா இருக்கலாம், ஆனா நம்ம எல்லாரையும் எப்ப டெலிவரி பண்ணனும்னு தெரிஞ்சவன் மேல இருக்கான்,,ஹா ஹா ஹா..

Wednesday, December 10, 2008

தலைவா! தலைவா

தலைவா! தலைவா!

  • சென்ற ஆண்டு தலைவரின் பிறந்த நாளில் நான் எழுதி திரு. சத்திய நாராயணா அவர்களால் வெளியிடப்பட்டு, முன்னாள் மேயர் திரு. கராத்தே தியாகராஜன் அவர்களால் பெற்றுக் கொள்ளப் பட்ட நூலின் மின் வடிவம் இது... இதைப் படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யும்படி வேண்டுகிறேன். சற்று பெரியது - வசனமா கவிதையா என்று சொல்ல முடியாதது போன்ற குறைபாடுகள் எனக்கே தோன்றினாலும், என் உணர்வுகளின் வெளிப்பாடு என்ற அளவிலே இதை முழுவதும் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    அன்புடன்,
    உங்களில் ஒருவன்
    ஈ ரா.
    புத்தக வடிவில் படிக்க
    ______________________________________________________

    தலைவா! தலைவா!

    தமிழக மக்களின் நலனையே
    தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும்
    சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு -
    வயதில் சிறியவன்
    வரையும் வாழ்த்து மடல் இது!

    நீ புகழ்ச்சி விரும்பாதவனாதலால்
    இது உன்னைப் புகழ்வதற்காக
    எழுதப்பட்டது அல்ல!
    உன்னையே சுவாசிக்கும்
    அன்பு நெஞ்சங்கள்
    படித்து மகிழ்வதற்காக மட்டுமே
    எழுதப்பட்டது..

    உன்னைப் பற்றிச் சொல்கையிலே -
    தன்னைப் பற்றிச் சொல்வதைப் போலும்
    ஒவ்வோர் முறை நீ வெல்கையிலும்
    தாமே வெல்வது போலும்
    மகிழ்கின்ற தமிழ் ரசிகர்களின்
    சந்தோஷத்திற்காக எழுதப்பட்டது..

    இதை நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
    ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும் !

    உன்னை ஒருமையிலே விளிக்கலாமா?
    ஏன் கூடாது?
    முருகனையும் கண்ணனையுமே
    நீ, வா, போ என்று கூப்பிடவில்லையா?
    அன்பின் மிகுதி இது -
    எம் இதயத்தின் பகுதி இது....

    _________________________________________________


    எங்கள் தலைவனே,
    திரையுலக முதல்வனே !
    உனது போயஸ் தோட்டத்திலிருந்து
    ஓஎஸ் என்ற வார்த்தை
    என்று வருமென்று
    காத்துக் கிடக்கிறோம் நாங்கள்!

    பொன் விழா கண்டும்
    புத்தம் புதிதாய் இருக்கும் உன்
    பொன் மேனியைப் பார்க்கிறோம்!

    உன் அங்கங்கள் -

    ஒப்பில்லா தங்கங்கள் !
    நேர்மை உன் இடக்கண் - நீதி உன் வலக்கண்
    நீ இருக்கையிலே எமக்கேது இடுக்கண்?

    அகண்ட உன் நெற்றி -
    அது காட்டும் ஆயிரம் வெற்றி!

    தலைவனே!

    சுவாசிப்பது மட்டுமல்ல உன் நாசி -
    பலசுவாசங்களுக்கு ஆதாரம் என்பதை யோசி!
    எம் இதயங்களை இப்போதாவது வாசி - நீ
    தலைவனானால் தமிழ்நாட்டிற்கே ராசி!

    உன்னிப்பாகக் கேட்கும் உன் காது - நீ
    உப்பரிகையிலே இருக்கும் சாது!
    உன் உதடுகள் துடிக்கும் பொது -
    எம் உணர்ச்சிக்கு நிகர்தான் ஏது?

    கழுத்து - சிலருக்கு ஆபரணங்களால் கெளரவம் !
    சிலருக்கோ அவர்தம் கழுத்தினால்தான்
    ஆபரணங்களுக்கே கெளரவம்!
    அதனால்தான் - நீ
    உலோகம் வெறுத்து
    உருத்திராட்சத்தினை
    உன் கழுத்திலே கொண்டாயோ?

    உன் கழுத்திலே கொட்டை!
    நெற்றியிலே பட்டை!
    தலையோ முழு மொட்டை!
    ஆனாலும் பல புத்தகங்களுக்கு
    இன்றைக்கும் நீதான் அட்டை!


    நிமிர்ந்து நிற்கும் உன் நெஞ்சம் - இதில்
    நிம்மியளவும் இல்லை வஞ்சம்!
    நெஞ்சிலே ஈரம் விஞ்சும் -
    நீ வந்தால் இருக்கவே இருக்காது பஞ்சம்!

    தலைவனே -

    உன் கைகள்
    வலிமைக்கு மாத்திரம் அல்ல!
    வறுமையை நீக்கவும்தான் அடிக்கடி நீள்கின்றன!

    வந்தார்க்கு மட்டுமே வாரி வழங்கி
    வள்ளலானோர் பல பேர்!
    ஆனால் நீயோ -
    தேடிச் சென்று தேவையறிந்து
    வழங்குவதிலே வள்ளல்களையும் விஞ்சி விட்டாய்!

    கொடுத்துச் சிவந்தனவாம் கரங்கள்!
    நீதான் கொடுப்பதே பிறர்க்கு தெரியாதே? -
    பின் எப்படி நாங்கள் கண்டு கொள்வது?

    இன்றைய உலகம்
    விளம்பரத்தையே விரும்பினாலும்
    சத்தமில்லாமல் நீ செய்யும் சாகசங்கள்
    சரித்திரத்தில் நிற்கத்தான் போகின்றன!

    உன் இடுப்பு -
    இந்த வயதிலும் ஆடுகிறது உன் இடுப்பு!
    அதனால்தான் எரிகிறதோ பல ஆயிரம் அடுப்பு?

    உன் கால்கள் -
    கடினமான பாதையைக் கடந்து வந்து
    காய்த்துப் போனாலும் என்றும்
    குறுக்கு வழியைத் தேடி நடந்ததில்லை!..

    தலைவனே

    சிறுத்துக் கிடக்கும் உன் உதரம் -
    உனக்காகச்சிந்தத் துடிக்கும் எம் உதிரம்! -
    உன் சிந்தனையும் செயலும் மதுரம் -
    மொத்தத்தில் நீ ஒரு சமச்சீரான சதுரம்!

    ஆம் -

    நீ அன்பிலே
    நான்கு பக்கங்களும் சமமான சதுரம்!
    கருணையிலே
    நீள அகலம் அளவிட முடியாத செவ்வகம்!
    நட்பிலே பரிவிலே
    ஒரே ஆரத்தைக் கொண்ட வட்டம்!

    என்ன முரண்பாடான வடிவங்களா
    என்று பார்க்கிறீர்களா?
    விடிவுகளுக்கெல்லாம் காரணமாக
    விளங்கப் போகும் ஒன்றை
    வடிவங்களிலே அடைத்திட முடியுமா என்ன?

    இதைப் படிப்பவர்கள் முகஸ்துதி என்பார்கள்!
    சொல்லிவிட்டுப் போகட்டும்!
    இப்படி ஒரு முகத்தை ஸ்துதிப்பதிலே
    நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்!

    தலைவனே,

    விரல் விட்டு
    எண்ணக்கூடிய அளவிலே
    இருப்பவர்களை வி.ஐ.பி என்பார்கள்!
    அவர்களே உன் விரலசைவிற்கு
    இன்று காத்திருக்கும் போது
    சந்தேகமே இன்றி நீ ஒரு வி. வி. ஐ. பி தான்!

    எப்பொழுதுமே மற்றவர்கள்
    ஏறிச் செல்லும் ஏணியாகவே வருகிறாயே? -
    ஒரு முறை ஏன் நீயாகவே வரக்கூடாது?

    உன்னைப் பற்றி-
    உன் வலிமையைப் பற்றி -
    உனக்கே தெரியாது!

    நீ ஒரு காட்டாறு!
    நீ ஒரு நெருப்பு நிலா!
    நீ ஒரு குளிர்ந்த சூரியன்!
    நீ ஒரு வெப்ப நதி!
    நீ ஓர் ஐஸ் எரிமலை!

    நீ அரசியலை ஊழல் அண்டாதிருக்கத்
    தடுப்பான சீனப் பெருஞ்சுவர்!
    நீ மேல்மட்டத்தில் இருந்தாலும்
    கீழே உள்ள மக்களுக்காகவும்
    தொங்கும் தோட்டம்!

    நீ கனவுத் துறையிலும்
    நிஜமாய் வாழ்பவன்!

    நீ
    வீர மராட்டிய குடும்பத்தில் பிறந்து
    கர்நாடகத்தில் வளர்ந்து
    தமிழ் இதயங்களில் நுழைந்து
    எல்லைகள் தாண்டி
    எட்டுத்திக்கும் ஆள்பவன்!

    உனக்கு தமிழ்நாடு மட்டுமா சொந்தம்?
    தரணி முழுவதும்தானே?

    இன்றைக்கு ஜப்பானே விரும்பும்
    ஒரே மேட் இன் இந்தியா - நீ தானே?

    தலைவனே - நீ

    அகில உலகமும் பாராட்டினாலும்
    அடக்கம் மாறாதவன்!
    அறியாதவர்கள் உளரும்போதும்
    அதிகம் பேசாதவன்!

    நீ
    குறுகிய பிராந்தியப் பிரசங்கிகளையும்
    தேசிய நீரோட்டத்தில் இணைக்க விரும்புபவன்!

    இப்படிப்பட்ட
    சிறப்பு வாய்ந்த நீ
    எங்கள்
    இதயச் சிம்மாசனத்திலே மட்டும்
    வீற்றிருந்தால் போதுமா?
    இமய மலைக்கு மட்டும்
    சென்று வந்தால் தீருமா?
    தலைவனே! - நீ
    ஓர் இயக்கச் சிம்மாசனத்திலே
    இருந்திடப் போவது எந்நாள்?
    இந்நாட்டு அரியாசனத்திலே
    அமரப் போவது எந்நாள்?

    கோடிகளிலே புரளும்
    கோமான்களுக்கு மத்தியிலே - தெருக்
    கோடியில் இருப்போரும் வளம்பெற
    கோலோச்சும் நாள் எந்நாள்?

    வெள்ளி விழா, பொன்விழாக்களையே
    விளையாட்டாய்க் கொள்ளும்
    வெற்றி வேந்தனே!
    எங்களுக்கான உன்
    துவக்க விழாவை வேண்டுகிறோம்!

    தலைவனே

    வெற்றி என்பதுதான்
    உனக்கு புதிதல்லவே?

    நீதான் -
    சிகரெட்டைத் தூக்கிப் போட்டே
    எங்கள் இதயங்களைப் பந்தாடியவனாயிற்றே?

    நீதான் -
    கலைந்த தலைமுடியினாலேயே எங்கள்
    மனங்களைக் கலைத்தவனாயிற்றே?

    தலைவனே - நீ

    எளிமையை உடுப்பாகக் கொண்டவன்!
    பிறருக்காகவே வாழும்
    ஏணியாகவும் தோணியாகவும்
    இருப்பவன்!

    உன் உடல் கரியது - ஆனால்
    உள்ளமோ மிக அரியது!
    உன் கண்கள் சிறியது - ஆனால்
    இதயமோ மிகப் பெரியது!

    உன்
    இதயத்தின்
    ஈரப்பதத்தை
    எந்தக் கருவியாலும்
    அளவிட முடியாது!

    நீ
    என்னைச்
    சுத்திகரிக்கும் ஆலை!

    நீ
    பலர் புகழும்போது
    மயங்கியதுமில்லை!
    சிலர் இகழும்போது
    பயந்ததுமில்லை!
    ஏனெனில்
    உனக்கு
    முள்ளும் மலரும் ஒன்றுதானே?

    நீ குடித்திருக்கிறாய் - ஆனால்
    குடித்ததில்லை என்று
    நடித்ததில்லை!

    நீ புகைத்திருக்கிறாய் - ஆனால்
    பிறர் வெற்றி கண்டு
    புகைந்ததில்லை!

    நீ
    ஒரு திறந்த புத்தகம் -
    உள்ளதை உள்ளபடி காட்டும் நிஜக் கண்ணாடி!

    நீ
    உள்ளொன்று வைத்து
    உதடொன்று பேசத் தெரியாதவன்!
    நீ கல்லடி பட்டே காய்ந்த மரம்!

    நீ
    உன் தர்மங்களை எல்லாம்
    தம்பட்டம் அடித்ததுமில்லை!
    உன் தவறுகளை என்றும்
    நியாயப்படுத்தியதும் இல்லை!

    இவையெல்லாம்
    உன் பலவீனமென்று
    பட்டியல் இடுவர் பல பேர்!
    ஆனால்
    நாங்கள் சொல்கிறோம் தலைவா!
    உன் அசுர பலமே அதுதான் என்று!

    தலைவனே!

    நீ கண்டக்டராகவும் கூலியாகவும் இருந்தபோது
    சில்லறையின் அருமையும் உணர்ந்தவன்!
    சூப்பர் ஸ்டாரான போது
    கோடிகளையும் அள்ளிக் கொணர்ந்தவன்!

    நீ -

    சிகரத்தின் மேலேறி
    சிங்கம் போல் நிற்கும் போதும்
    சிறு குழந்தை மனதுடன்
    அடக்கத்தோடு இருப்பவன்!

    சத்தியமாய்ச் சொல்கிறோம்!
    உன் இடத்திலே
    வேறொருவர் இருந்திருந்தால்
    அவர் கொட்டம் அடங்காது!

    ஆனால் நீயோ -

    சலனமற்று இருக்கும்
    தெளிந்த நீரோடையாக இருக்கிறாய்!
    பனி மலையிலிருந்து விழுகிற
    சில்லென்ற தூய அருவியாக இருக்கிறாய்!
    கள்ளங் கபடமற்ற
    நதியாக இருக்கிறாய்!
    கருணையும் அன்பையும்
    தன்னகத்தே கொண்ட
    அமைதிக் கடலாக இருக்கிறாய்!

    தலைவனே!

    எங்கள் நரம்பு மண்டலத்தின்
    நாலாபுறமும் நீ வசிக்கிறாய்!
    எங்கள் இரத்த அணுக்களிலே நீ மிதக்கிறாய்!
    எங்கள் தசைகளிலே நீ தவழ்கிறாய்!
    எங்கள் எலும்பின் வலிமையாய் நீ வாழ்கிறாய்!
    எங்கள் உறுப்புக்களிலே நீ உடனிருக்கிறாய்!
    சுருக்கமாகச் சொன்னால் -
    உச்சி முதல் பாதம் வரை
    கோடானு கோடி இளைஞர்களின்
    உயிர் மூச்சாய் நீ வாழ்கிறாய்!
    ஆம்!
    எங்களுக்குள்ளே நீ வாழ்கிறாய்!
    உனக்குள்ளே நாங்கள் வாழ்கிறோம்!

    தலைவனே!

    நீதான் -
    எங்கள்
    இதயச் சந்திர மண்டலத்திலே
    முதலிலே காலடி வைத்த
    ஆர்ம்ஸ்ட்ராங்!

    நீதான் -
    எங்கள்
    இதய எவரெஸ்டின் உச்சியை
    முதலிலே எட்டிய
    டென்சிங்!

    நீதான் -
    குழந்தைச் சக்திமான்கள்
    விரும்புகின்ற
    பக்திமான்!

    நீதான் -
    மனம் என்னும் விக்கெட்டுக்களை
    அதிகம் வீழ்த்திய
    கபில்தேவ்!

    உலகெங்கும் தமிழ்த் திரையை
    முதுகில் சுமந்து செல்லும் உன்னை -
    தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்பவருக்கு
    எங்கள் தர்ம யுத்தம்தான் பதிலாகும்!

    மதுரையை ஆண்டவன் பாண்டியன் - நம்
    மனங்களை ஆள்பவன் இப் பாண்டியன்!
    வேலைக்காரனும் நீதான்!
    எஜமானும் நீதான்!
    இராணுவ வீரனும் நீதான்!
    படையப்பனும் நீதான்!
    நீ ஒரு உழைப்பாளி!
    குணத்திலும் நீ ஒரு பணக்காரன்!
    நீ ஒரு சிதறாத முத்து!
    நீ ஒரு பாயும் புலி! -
    நீ ஒரு தர்ம துரை!
    நீ ஒரு மலை! அண்ணாமலை!
    நீ அருணாசலம் மட்டுமல்ல!-
    கருணாச்சலமும் தான் !
    நல்லவனுக்கு நல்லவன் - நீ
    நாட்டுக்கு ஒரு நல்லவன்!

    மாவீரனே -
    மொத்தத்தில் நீ
    ஒருஅதிசயப் பிறவி!

    தலைவனே - நீ
    சாதிச் சுருக்கங்களையும்
    மத மடிப்புக்களையும்
    நீக்க வந்த
    இஸ்திரிப் பெட்டி!

    உன் வழி என்றுமே தனி வழி!
    உன்னை எதிர்ப்போர் ஆகிடுவர் ஒரு வழி!
    உனக்கெனவே போடு பிள்ளையார் சுழி! - பின்னர்
    உன் மீது விழாது வீண் பழி!

    நீ ஒரு தடவை சொன்னால்
    நூறு தடவை சொன்ன மாதிரி!
    எங்களுக்காக ஒரே ஒரு தடவை
    உன் சம்மதத்தை சொல்லிவிடேன்!

    பால்காரனே -
    எங்கள் இதயங்களிலே
    என்றைக்கு நீ பால் வார்க்கப் போகிறாய்?

    ஆட்டோக்காரனே -
    ஆட்சி என்னும் ஆட்டோவை
    என்றைக்கு நீ ஓட்டப் போகிறாய்?

    முரட்டுக் காளையே -
    பகைகளை எல்லாம்
    என்றைக்கு நீ முட்டி வீழ்த்தப் போகிறாய்?

    மின்சாரக் கண்ணா -
    உன் நெற்றிக் கண்ணைத் திறந்து
    என்றைக்கு தீமையைச் சுடப்போகிறாய்?

    தளபதியே -
    மவுனம் என்னும் கேடயத்தை மட்டுமே
    எப்போதும் காட்டுகிறாயே -
    உன் முழு பலம் என்னும் வீர வாளை
    எப்போது வெளியே எடுக்கப் போகிறாய்?

    உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்?
    நீ ஒரு விரிவான விடை!
    நீ சரியானதைத் தேர்ந்தெடுப்பவன்!
    நீ வெற்றாக இருக்கும் கோடுகளை நிரப்புபவன்!
    நீ மக்களை மனித நேயத்தோடு பொருத்துபவன்!
    நீ ஒரு கட்டுரை!
    நீ எங்களுக்குத் துணைப்பாடம்!
    நீ எப்படி வாழ வேண்டுமென்ற இலக்கணக் குறிப்பு!
    நீ அடி மட்டத்திலும் வாழ்ந்தவன்!
    நீ அடி பிறழாமலும் வாழ்பவன்!

    தலைவனே !

    நீ எங்கள்குடும்பத்தைப் பார்க்கச் சொன்னபோது
    ஒரு தாயின் பொறுப்பை கண்டோம்!
    நீ பிறந்த நாளில் கூட தேவையற்றப்
    பிரயாணங்களைத் தவிர்க்கச் சொன்ன போது
    ஒரு தந்தையின் கண்டிப்பை உணர்ந்தோம்!
    நட்பையும், சகோரத்துவத்தையும்
    உன்வாழ்க்கைப் பாடத்தால் உணர்ந்தோம்!
    ஓய்வையும், உழைப்பையும்
    உண்மையாய் ரசிக்க உன்னிடமே படித்தோம்!
    நீ தியானம் செய்யச் சொன்ன போது
    குருவின் பெருமையை அறிந்தோம்!
    நட்டத்தில் கூட நல்லிதயத்தைக் காட்டியபோது
    தெய்வம் மனிதமெனத் தெரிந்தோம்!

    இத்தனையும் கண்ட பின்பே
    இனி நீதான் எங்கள்
    வழிகாட்டி என
    வாயாரச் சொல்கின்றோம்!

    தனியொரு மனிதனைத்
    துதிப்பதா என்பார்கள்!
    எங்களைப் பொறுத்தவரை நீதான் -
    மனிதன் என்ற ஒருமை கிடையாதே!
    மனிதம் என்ற பன்மை ஆயிற்றே!

    இன்றைய நாள்
    தீபாவளி அல்ல!
    இன்றைய நாள்
    ரம்ஜான் அல்ல!
    இன்றைய நாள்
    கிருஸ்துமஸ் அல்ல !
    ஆனாலும்
    எங்கள் அனைவருக்கும் திருநாள்!
    ஏன் தெரியுமா?
    உலகம் வியந்திடும் இன்னொரு
    உன்னத ஆத்மா
    புதிதாய்ப் பரிணமித்த நன்னாள் !

    ஆம்!
    மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
    மனங்களுக்குச் சொந்தக்காரன்
    மண்ணிலே பிறந்த நாள்!

    தங்கத் தமிழ்நாட்டுத்
    தாய்மார்களின் தலைமகன்
    தரணியில் தடம்பதித்த பொன்னாள்!

    தட்டிலே தலைவர்கள் ஆட்சிக் கட்டிலை
    ஏந்தி வந்த போதும்
    தடுமாறாமல் நின்ற தன்னிகரில்லாத்
    தலைவன் பிறந்த நாள்!

    வந்த வழியை மறக்காமல்
    வாழும் வழியை மறைக்காமல்
    ஆசை சிறிதும் பிறக்காமல்
    ஆட்சிக் கதவைத் திறக்காமல்
    அடக்கத்தோடு நிற்கும்
    அலெக்ஸ் பாண்டியனின் பிறந்த நாள்!

    பாரத மாதாவின் புதல்வர்களை
    பார் போற்றச் செய்யப் போகும்
    பாட்ஷாவின் பிறந்த நாள்!

    வெற்றுப் பேச்சு வீணர்களை
    விரட்டியடிக்கப் போகும்
    வேட்டையன் பிறந்த நாள்!

    தன் கர்ஜனையால் பல
    சிம்மங்களையே சிதறடித்த
    சிவாஜியின் பிறந்த நாள்!

    உலகெங்கும் வெற்றிக் கொடி நாட்டப் போகும்
    வீர சுல்தானின் பிறந்த நாள்!

    மக்கள் மனம் நுழையும்
    மந்திரம் அறிந்த
    எந்திரனின் பிறந்த நாள்!

    இருள் சூழ்ந்த
    தமிழகத்தில்
    மின்னலாய்
    விடி வெள்ளியாய் தோன்றி
    ஒளிமிகு வட்டமாய் விளங்கும்
    வெளிச்சக் குவியல் பிறந்த நாள்!

    தன்னை பக்தி கூட்டுக்குள்
    கட்டிக் கொண்ட
    ஆன்மீகப் புதையலின் பிறந்த நாள்!

    டிசம்பர் 12 -
    நீ பிறந்ததால்
    இந்த நாளும்
    பெருமையடைகிறது!
    இந்த நாடும்
    பெருமைப்படுகிறது!

    வாழ்க ரஜினி! வளர்க அவர் புகழ்!
    ________________________________________
  • உணர்வும்ஆக்கமும்
    ஈ ரா