Sunday, February 22, 2009

உயிரே உன் விலை என்ன?

உயிரே உன் விலை என்ன?

ஆயிற்று, நேற்றோடு ஏழாவது சுய உயிர் வதை. நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஒருவர், மனித சங்கிலி போராட்டத்தில் தன் உயிர் சங்கிலியை துண்டித்துக் கொண்டார்.

முத்துகுமார் என்னும் இளைஞர் முதலில் துவங்கி வைக்க இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முடிவு இருக்கிறதா என்ற அச்சம் தோன்றுகிறது.
அங்கே இலங்கையில் வேறு வழியே இல்லாத நிலையில் யுத்த களத்திலும், குண்டு மழையிலும் இழக்கின்ற உயிர்களாவது கதியே இல்லை என்ற நிலையிலும் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் தலைவர்களை தண்டிக்க வழியே இல்லை என்ற நிலையிலும் ஏற்பட்டது.

ஆனால் இங்கோ, அரசியல் தலைவர்களின் தூண்டுதல்களாலும், ஊடகங்களின் அதீத பிரச்சாரத்தாலும், சுய இரக்கம் மேலிட தன்னம்பிக்கையும், எதிர்காலம் மாறும் என்ற நம்பிக்கையும் இல்லாத தன்மையில் உயிரை இழக்கிறார்கள். இவர்களை யார் இவ்வாறு தவறான பாதையில் வழிநடத்துவது? ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் மற்றும் விஞ்ஞான வலைத்தளங்களும்தான்.

நண்பர்களே எல்லோருக்கும் தான் உணர்வு இருக்கிறது. உயிரை மாய்துத்தான் உணர்வை வெளிக்காட்ட முடியுமா என்ன? அப்படி நீங்கள் இறப்பதால் தலைவர்களும் மற்றவர்களும் மாறிவிடப் போகிறார்கள் என்று நீங்கள் நினைத்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் ஆத்மாவை இங்குள்ள அரசியல் வாதிகளும், இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் சாந்தி அடைய விட மாட்டார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் இருந்து, இங்கே தமிழ், தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தும் நீங்கள் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது, உங்கள் மீது கோபம் கொள்ள வைக்கிறது.

அரசியல் தலைவர்களுக்கு என்ன, எங்கும் பற்றி எறிய ஆவேசமாக உரை நிகழ்த்தி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய் வீரம் காட்ட முடியும்.. எழுத்தாளர்களுக்கோ இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சியை தூண்டி எழுதி இந்த பிரச்சினை முடிந்ததும் நவரசத்தில் வேறொரு சுவையில் தங்கள் படைப்புக்களை கொடுக்க முடியும்.

ஆனால் உன்னை நம்பிய உன் குடும்பத்திற்கும், உன்னை படிக்க வைத்த பள்ளிக்கும், உனக்காக இந்த தேசம் கொடுத்த இயற்கை வளத்திற்கும், இதையெல்லாம் மீறி, உன் ஆட்சியாளனை நீ விரும்பினால் மாற்றலாம் என்று உனக்கு வழங்கப்பட்ட ஜனநாயகத்திற்கும் நீ என்ன கைம்மாறு செய்ய முடியும்?

எப்பொழுது நீ உயிரையே துச்சம் என நினைத்து விட்டாயோ, அப்பொழுதே நீ எதையும் சாதிக்கும் வலிமையை பெறுகிறாய். இந்த நெஞ்சுரத்துடன் நீ நினைத்தால் இந்த சமுதாயத்தில் நேர்மையாக எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் . உயிர் பயமும், குடும்ப சூழலும் மட்டுமே இங்கே பல பேருக்கு கைவிலங்குகள். அதையே நீ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால் பிறகு ஏன் கோழையைப் போல் இறக்க நினைக்கிறாய்?

இப்படி இறந்தவர்களை, மாவீரன் என்று சிலகாலம் கொண்டாடுவார்கள். உன் போல் இன்னும் சில பேர் இறந்தால் நீ மறக்கப்படுவாய். மிஞ்சி மிஞ்சி போனால் கேவலம் சில லட்சங்களும், நீ இறந்து சில ஆண்டுகளுக்கு உனக்கு அஞ்சலியும் கிடைக்கும். அதன் பிறகு வேறொரு பிரச்சினை வரும், இதே போல மீண்டும் தூபம் போடப்படும்... வேறு சில அப்பாவிகளுக்கு தீபம் ஏற்றப்படும். இந்த இழி நிலை தேவையா? உன் உயிர் அவ்வளவு இளப்பமா?

அரசியல்வாதிகளே, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என்றீர்கள், வைத்து விட்டீர்கள். இன்னுயிரை இழக்கத் தயாராகுங்கள் என்றீர்கள், அதை நம்பி சில பேர் இழந்தும் விட்டார்கள்... இன்னும் என்னதான் உங்கள் ஆசை?

உங்கள் கையில் ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கிறது, உங்களாலேயே இதை தீர்க்க முடியவில்லை என்றால் சாதாரண மக்கள் நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது.. நிறையவே இருக்கிறது.. நீங்கள் மேடை போட்டு, தூண்டி எழுதி, அறிக்கை விட்டு எங்களை உசுப்ப வேண்டாம்.

நீங்கள் உண்மையிலேயே பிறந்ததற்கு வெட்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஒவ்வொரு கட்சியும் ஒரே நிலையை எடுங்கள். அரசியல் நிர்பந்தங்களுக்காக உங்கள் நிலையை மாற்றிக் கொண்டு நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்.

நண்பர்களே உங்களுக்கு வாக்குசீட்டு என்னும் ஓர் ஆயுதம் கொடுத்து இருக்கிறார்கள் - உங்கள் முன்னே ஓர் களமும் இருக்கிறது, அதுவும் விரைவில். அதுவரை காத்து இருங்கள். அதற்கும் முன் கேவலமான ஆயுதமான மண்ணெண்ணையும் பெட்ரோலையும் எடுக்காதீர்கள்.

இவர்களின் வெற்றுகூச்சல்களுக்கு செவிமடுக்காதீர்கள். உண்மையான அன்புடன், இறைவனிடம் அமைதிக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் உணர்வுகளை பிறரை நேசிக்கும் உதவியால் வெளிப்படுத்துங்கள்.

உலகம் பெரியது. கண் செவி கை கால் மனம் இழந்த எத்தனையோ மனிதர்கள், ஈழத்தில் மட்டும் அல்ல இங்கேயும் இருக்கிறார்கள், உங்கள் உயிர் வேண்டாம் எனில் அதை அவர்களுக்காக முழுவதும் வாழ்ந்து அர்ப்பணியுங்கள்....

ஜெய் ஹிந்த்.

ஈ ரா

Monday, February 2, 2009

கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்....



அது ஒரு காலம்...

பாடகர்களும் நடன வித்தகர்களும் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என்று இருந்த நிலை..

அப்பொழுது மேற்கூறிய இரண்டிலுமே போதிய திறமை இல்லாத இரு பெரும் ஜாம்பவான்களாக எம்.ஜி இராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும், கால் பதித்து.. தமது நாடக அனுபவங்களை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு தமிழ் திரையுலகின் புதிய பரிமாணக் கட்டிடத்தை எழுப்பத் தொடங்கினார்கள்.

தங்களுக்கு என்று ஒரு தனிப் பாதையையும் திறமையையும் கொண்டிருந்த அந்த சிங்கங்கள் யாரையும் வழிகாட்டியாகக் கொள்ளவும் இல்லை.. யாரையும் பிரதி எடுக்கவும் இல்லை... இருதுருவங்களுக்கும் தனித்தனி எல்லை.. தனித்தனி சாம்ராஜ்யம்... என்று வகுத்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகின் மன்னர்களாக விளங்கினார்கள்.

எல்லா சகாப்தத்துக்கும் ஒரு வயதும் எல்லையும் உண்டு என்ற உலக நியதிப்படி அவர்களின் திரையுலக காலமும் எழுபதுகளின் ஆரம்பத்தில் நிறைவு பெறத் தொடங்கியது.. அந்த நேரத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்ற ஜெய் ஷங்கர், ரவி சந்திரன், முத்துராமன் போன்றவர்கள் நல்ல நடிகர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்த போதிலும் மக்கள் திலகத்தையும் நடிகர்திலகத்தையும் போல் முதல் இடங்களைப் பிடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா சக்தியாக இடம் பிடிக்க முடியவில்லை..

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் இப்படி நகர்ந்த போது, தமிழ் திரையுலகம் பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. நடிகர்களையும் மீறி இயக்கம் என்பதன் வலிமை உணரப்பட்டது. கதாநாயக துதி பாட்டில் இருந்து கதை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நல்ல கதைகளும், நல்ல நடிகர்களும் கிடைக்கப் பெற்றது தமிழ் திரையுலகம்..

இந்த சூழ்நிலையில் தான் கேபியால் பட்டை தீட்டப் பட்டார்கள் ரஜினியும், கமலும். என்னதான் திறமை சாலிகளாக இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவேளை பத்து ஆண்டுகள் முன்னாலேயே கதாநாயகர்களாக அறிமுகம் ஆகி இருந்தால் மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் முன்னால் நிலைத்து நின்று இருக்க முடியுமா அல்லது அப்படியே இருந்தாலும் இவர்கள் திறமைக்கு அந்த தலைமுறை ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து இருப்பார்களா என்பதும் சந்தேகமே.

ஆண்டவன் அருளால் அவர்களுக்கு ஒரு சரியான இடைவெளி கிடைத்தது.. இரண்டு பெரும் நட்சத்திரங்களும் போதும் என்று அவர்களாகவே வேறு முறைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்ட பின், சில ஆண்டுகள் கழித்து வந்ததால், மக்கள் புதுமையை ஏற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்பட்டது. இதை ரஜினி கமல் இருவருமே உணர்ந்து இருந்ததால், எந்த சூழ் நிலையிலும், தங்கள் முன்னோடிகளை பரிகசித்தோ அல்லது அவர்களை பின்பற்றியோ நடிக்காமல் புது வழியைக் கண்டார்கள்.. வெற்றியும் பெற்றார்கள்..

பல நேரங்களில் அவர்கள் இருவரின் ரசிகர்களின் மோதல்கள் நடைபெற்றன.. அது ஒன்றும் புதியது அல்ல.. ஏற்கனவே எம்ஜியார், சிவாஜி ரசிகர்கள் போடாத சண்டையும் அல்ல.... ஆனால் ரஜினியும் கமலும் என்றைக்கும் எம்ஜியார் - சிவாஜியுடன் போட்டி போட்டது இல்லை.. போட்டு இருக்கவும் முடியாது.. ஏனெனில் அவர்கள் வளர்ந்தார்கள், வளர்க்கப் படவில்லை... திரையில் ஆடினார்கள் - வாழ்க்கையில் பிறரால் ஆட்டுவிக்கப் படவில்லை..

தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் மீறி தாங்களே தங்களை அடுத்த எம்ஜியார் என்றோ அடுத்த சிவாஜி என்றோ சொல்லிக்கொள்ளவில்லை.. மக்களாகவே பார்த்து இவர் அவருக்கு மாற்று... என்று முடிவு செய்தார்கள்.. அவர்களின் இடங்கள் ஓரிருவரால் முடிவு செய்யப்படவில்லை... ஓரிரு படங்களாலும் முடிவு செய்யப்படவில்லை... ஓரிரு ஆண்டுகளினாலும் முடிவு செய்யப்படவில்லை...

ஆனால் இன்றைக்கும் ரஜினியின் சிவாஜி படத்தின் சாதனையையும் கமலது தசாவதாரத்தின் சாதனையையும் நெருங்கக் கூட முடியாத அல்லது நினைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் போதே அவர்களையும் தாண்டி, அதற்கும் முன்னால் இவர்கள் பிறந்தே இருக்காத காலத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் பிம்பம் நான்தான் என்று தாங்களே தமுக்கடிக்கும் நடிகர்களை நினைத்தால் இவர்கள் எதோ மனோ வியாதியில் இருக்கிறார்களோ என்று பச்சாதாபம்தான் தோன்றுகிறது...

ரஜினியின் தோல்விப் படத்தை விட இவர்களின் வெற்றிப் பட வசூல் குறைவு என்பதும் தமிழ் நாட்டை தாண்டினால் இவர்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கும் போதே இவர்களுக்கு இவ்வளவு ஆற்றாமை என்றால், தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆண்டுகள் வெற்றி படங்களையே கொடுத்தால் இவர்கள் என்ன ஆட்டம் போடுவார்கள் என்று நினைத்து பாருங்கள்? ஒரு பழமொழி சொல்வார்கள், ஆட்டுக்கு வால் அளந்து வைத்தான் என்று. கடவுளுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் யார் யாருக்கு எந்த இடம் எப்பொழுது கொடுக்கப் பட வேண்டும் என்று.. அதை விட்டு விட்டு வில்லை எடுத்தவன் எல்லாம் ராமன் ஆகி விடலாம், பறப்பது எல்லாம் பருந்து ஆகிவிடலாம் என்று நினைத்தால் காலம் உங்களைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்..

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்தவர்களின் பட்டியலில் இன்னொரு அத்தியாயம் எழுதப்பட்டு பிற்கால சந்ததிக்கு, உங்களை அறியாமலே நீங்களே எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு வழி காட்டியாகி விடுவீர்கள்... அதையாவது செய்து தொலையுங்கள், பிறந்ததுக்கு ஒரு பிரயோஜனமாவது இருக்கட்டும்....

அன்புடன்,

ஈ ரா