Tuesday, November 24, 2009

வரவில்லை


கடிதம் எழுத நினைத்தேன்
கை வரவில்லை!

கவிதை சொல்ல நினைத்தேன்
வாய் வரவில்லை !

நெருங்கி வர நினைத்தேன்
கால் வரவில்லை !

தூங்கையில் நினைத்தேன்
தூக்கம் வரவில்லை !

சாப்பிட நினைத்தேன்
பசி வரவில்லை !

இவை மட்டும்தானா
வரவில்லை ?

கடைசியில்
கிளம்பி நிற்கையில்
வந்து விடுவேன் என்று சொன்ன

நீயும்தான் வரவில்லை ........


படம் : இணையத்திலிருந்து

Friday, November 13, 2009

தொட்டாச் சிணுங்காக் காதல்


பொய்யான கோபங்களும்
சின்னச் சின்ன தாபங்களும்
அதீதமான வியப்புக்களும்
அபத்தமான பேச்சுக்களும்
ஆழமான தேடலும் கொண்ட
நிஜமான காதல் !

இது
நிழல் மனிதர்கள் தொடர்ந்தாலும்
நெருஞ்சி முற்கள் நெருடினாலும்
கருங்கற்கள் இடறினாலும்
காயம்பட்டு நொந்தாலும்
தொடர்ந்து செல்கின்ற
தொட்டாச் சிணுங்காக் காதல் !

அவள் பார்க்கிறாளா என்று அவன் பார்ப்பதையும்
அவன் பார்க்கிறானா என்று அவள் பார்ப்பதையுமே
தமக்குப்
பார்வை கிடைத்ததன்
பயனாக உணர்கிறார்கள் !

மாலையிலே பிரிந்து
மனைக்கு செல்கையில்
மனையில் ஏறி
மாலை சூடும் நாளை நினைத்து ஏங்குகிறார்கள் !

இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறார்கள் !

அவன் யார் ? அவள் யார் ?
முழுவதும் அறியும் முன்னே
முன்னுரை வரைகிறார்கள் !

தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !

பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !

இத்தனை வருடம் இல்லாமல்
திடீரென்று
காசு கொடுத்து
கிரீட்டிங் கார்டு வாங்கத் தோன்றுகிறது !

கவிதையென்ற பெயரில்
கன்னாபின்னாவென்று
கிறுக்கத் தோன்றுகிறது !

காதல் -
தோணக் கூடாததைஎல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !

யூத் விகடனில் படிக்க

படம் இணையத்திலிருந்து

Wednesday, November 4, 2009

ஏழைத் தாய்


வறுமை
தாங்க முடியவில்லை!

குடிகாரக் கணவன் !
கொலைப் பட்டினியில்
குழந்தைகள் !

டீக்கடைக்குக்
கடன் பாக்கி !
பால் டின் வாங்க
பணம் இல்லை !

இப்படி ஓர் வாழ்க்கை
இன்னும் தேவையா ?

இன்றே சாகிறேன்
தீக்குளித்து !

நாளை முதல்
மண்ணெண்ணெய்
விலை ஏறுகிறதாம் !