Friday, October 1, 2010

தேசப் பிதா


நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !

நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !

நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !

நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !

உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !

உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !

காலாற
நடந்து விட்டு வரலாம்
என்பர் பல பேர் !
நீயோ
நடந்து கொண்டே
இருந்ததால்
உன் கால்களை
என்றைக்கும்
ஆற விட்டதே இல்லை !

நங்கையரின்
எழில் கூந்தலும்
நாணித் தலைகவிழும்
உன்
மொட்டைத் தலையின்
கவர்ச்சி கண்டு !

ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!

ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !

நீ
நித்தியம்
அனுபவித்த
சோதனை எல்லாம்
உனக்கல்ல -
சத்தியத்திற்கே !

நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !

நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !

நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !

உன் மனம்
தெளிந்த குளம் போல்
இருக்கிறதே என்ற
பொறாமையில்
மதக் கல்லை
விட்டெறிந்து
பதம் பார்த்தவர்கள்
எம் முன்னோர் !

ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !

அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி

சட்டைப் பைகளில்
கசங்கலாய் ...... !

-----------

ஈ. ரா

(மீள் பதிவு.. படம் : இணையம் )