Saturday, April 2, 2016

பால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா

பால வித்யாலயா (the school for young deaf children)
பள்ளிக்கு வாழ்த்துப் பா 



சமர்ப்பணம் 

பால வித்யாலயா 
இது -
பால வித்யாலயா மட்டும் அல்ல 
பல பாலர்களை 
சமூகக் கடலின் 
அக்கரையில் இருக்கும் 
பல நூறு வித்யாலயங்களுக்குக் 
கொண்டு சேர்க்கும் 
பாலமாகவே விளங்கும் 
'பால' வித்யாலயாவும் தான் !

பல நெருக்கடிகளில் 
கழுத்துவரை வெள்ளம் வரினும் 
தொய்வின்றித் 
தெய்வக் குழந்தைகளைத் 
தோளில்  சுமப்பதால் 
தோழ வித்யாலயாவும் தான் !

பெற்றவர்கள் 
நாங்கள் - மீண்டும் 
பிள்ளைகள் போல் 
பள்ளி வந்தோம் !

பல வருடம் 
வயது குறைந்து 
பிள்ளைகளுடன் 
துள்ளி வந்தோம் !

அள்ளக்குறையா அன்பை 
ஆசிரியர் தம் 
உறவில் கண்டோம் !

இது என்ன விந்தை ?
கருணை என்பது மட்டும் 
என்றுமே வற்றாத 
ஜீவ நதியாய் விளங்குகிறதே !

மூழ்கிக் குளித்து 
முத்தெடுத்து 
முன்னும் பின்னும் நீச்சலிட்டு 
நெஞ்சு நிமிர்த்தித் தலை துவட்டி 
எந்த நீச்சலுக்கும் 
எதிர் நீச்சலுக்கும்  தயாராகி 
நன்றி சொல்லி நகர்கின்றன 
கால்கள் !

படித்துறையில் - அடுத்துப் 
பாடம்படிக்கத் 
தயாராய் - இன்னும் 
சில நூறு கால்கள் !

சில பிஞ்சுகள் 
பயம் அறியாதவை !
சில பிஞ்சுகளோ 
பயம் தவிர 
வேறெதுவும் அறியாதவை !

அந்த நதி 
என்றைக்கும் 
பிஞ்சுகளைப் பயப்படுத்துவதில்லை !

நெஞ்சில் நிறைத்து 
அன்பு பாராட்டியது !

வாயுள்ள ஜீவன்களாய் 
மாற்றி 
வாய்மையே வெல்லும் என 
வரி வரியாய்ப் 
போதித்தது !

இன்னும் பயம் தொலைக்க,
எங்கள் அலைகளைக் கூட 
பெயரிட்டுக் 
கூப்பிட்டுக் கொள்ளேன் என்று 
ஆசையுடன் 
அனுமதி தந்தது !

அலைகளும் கரைகளும் 
ஒன்றாய்க்  கயிறு பிடித்து 
எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
இங்கு பார்க்கலாம் !

தெளிந்த நீரோடை போல் 
தூய நீராய் ஓடுகையில் - இங்கே 
மனச் சேற்றுக்கு 
என்றுமே வழியில்லை ! 

ஒரே இடத்தில் 
சுற்றி அமுக்கும் 
சுழல் ஓட்டம்
இங்கு  இல்லவே இல்லை !

நினைத்துப் பார்க்கிறோம் !
மருத்துவர்கள் 
உம்  பிள்ளையின் 
செவியில் கேட்கும் திறன் 
குறைவு என்று 
சொன்ன போது, 
அந்தச் சத்தம் 
இடி போல் விழுந்தது 
எங்கள் காதுகளில் !

ஆனால் 

மின்னல்போல் 
ஒரு வெளிச்சக் கீற்று 
இருளுக்கு நடுவே 
முதன் முதலாய் 
தென்பட்டது 
பால வித்யாலயாவின் 
பரிவான 
பார்வை பட்ட போது !

அந்த 
முதல் நாளை 
எவராலும் 
மறக்க முடியாது !

ஏற்கனவே 
பூத்துக் குலுங்கும் 
சோலைகளைப் பார்த்த பின்பு 
நமது குறுஞ்செடியும் 
துளிர்க்குமென்னும் 
நம்பிக்கை  விதை 
நெஞ்சில் முளைத்தது !

சோலையில் இடம் 
வேண்டுமானால், உன் 
சொகுசை மற ! - முதலில் 
உன் செடியை உணர் 
என்று சொல்லப்பட்டது !

காலை நான் நீரிட்டால் 
மாலை நீ நீரிடு என்று 
கரிசனத்துடன் 
கட்டளை இட்டது !

முடியுமா என்ற 
மலைப்புடன் 
முதல் குவளை நீரைச் 
சேர்ந்தே ஊற்றினோம் !

நாட்கள் நகர்ந்தன !

நாளொரு மேனி 
பொழுதொரு வண்ணம் என்பார்கள் !
உண்மைதான் !
இந்தச் செடிக்கு 
நாளொரு பாடம் - 
பொழுதொரு செயல்முறை 
என 
போதிக்கப்பட்டது !

அப் போதனை 
செடிகளுக்கு மட்டுமல்ல 
கொண்டு வந்த 
விவசாயிகளுக்கும் 
சேர்ந்தே கூடத்தான் !

சில காலத்திலேயே 
பதியனிடப்பட்ட  மலர்ச்செடிகளைப் 
பக்குவமாய்த் 
துளிர்க்கச் செய்தீர் !

வேர்களை 
சோர்வு, தன்னிரக்கம் , சுயமின்மை 
என்னும் பூச்சிகள் அண்டாவண்ணம் 
'கண்டிப்பு ' என்னும் 
பூச்சு செய்தீர் !

வேண்டு மட்டும் 
விலைமதிப்பில்லா 
அறிவு ஒளியை 
விலை இல்லாமலேயே 
விரும்பித் தந்தீர் !

இந்தச் செடிகளில் 
இனி எத்தனையெத்தனை 
நல்ல உள்ளங்கள் 
எத்தனை முறை 
நீரூற்றினாலும் 
நீங்கள் ஊற்றிய 
நன்னீரின் ஈரப்பதம் 
நாளும் குறையாது !

ஏன் தெரியுமா ?

நீரை உறிஞ்சும் 
வித்தை என்பதையே 
நீர்தானே 
இச்செடிகளுக்குக் 
கற்றுத் தந்தீர் !

தட்டிக் கொடுத்து 
வளர்த்த பிள்ளையை 
கட்டிக் கொடுத்து 
அனுப்பும்
தந்தையும் தாயும் 
கண் கலங்க - 
பெற்றவரைப் பிரிந்து செல்லும் 
பிள்ளைகள் போல 
இங்கே 
பெற்றவர்களே 
பிள்ளைகளாய் மாறி 
நிற்கிறோம் !

எடுத்த கைகள் 
வணங்கிச் செல்லவோ 
விழி துடைக்கவோ 
என்று புரியாமல் 
ஏக்கத்துடன் நிற்கிறோம் !

அம்மா - 
உங்கள் ஓட்டம் 
அசாதாரணமானது!
ஓய்வென்பதே 
ஒருபோதும் அறியாதது!

விருட்சமாய் வளர்ந்து நீங்கள் 
தோட்டமாய், தோப்பாய் 
ஏன் 
அடர்காடாய் 
உலகெங்கும் 
நிறையட்டும்!

ஓசை மட்டுமே 
எழுப்பிக் கொண்டிருக்கும் 
குருவிகளும் குயில்களும் 
சிட்டுக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் 
வார்த்தைச்  சத்தங்களையும் 
தங்கள் 
சந்தங்களில் சேர்க்கட்டும் !

இவைகளின் குரல்கள் 
ஒன்றாய் மேலெழும்பி 
விண்ணை முட்டட்டும் !

இறைவன் - இவ் 
விளையாட்டை 
முற்றிலும் நிறுத்தும்வரை 
இப்புவியில் நும் பணி 
சிறக்கட்டும் !

சொன்னதை சொல்லுமாம் 
கிளிப்பிள்ளை என்பார்கள் !
சொல்லிச் சொல்லி 
எங்கள் கிளிப் பிள்ளைகளை 
சுயமாகவும் 
சொல்ல வைத்த பெருமை 
சுடராக  ஒளிரட்டும் !

சமுதாயமே !

"ஐயோ !,சத்தம் போடாதீர்கள் !
என் பிள்ளை எழுந்திடுவான் "
என்று சிறு ஊசிச் சத்தத்திற்கும் 
புலம்பித் தீர்க்கும் 
தாய்மாரையே  நீ 
கண்டிருப்பாய் !

"ஐயா ! ஏதாவது ஒரு 
சத்தம் கேட்டு என் பிள்ளை 
எழுந்திருக்காதா?" என்று 
ஒவ்வொரு நாளும் 
தூங்காமல் ஏங்கிய 
தாய்மாரை உனக்குத் தெரியுமா ?

கிலுகிலுப்பையையும் டமாரத்தையும் 
வெறும் அசையும் பொருளாய் 
மட்டுமே பாவிக்கும் 
மணிகளின் மன வலி தெரியுமா ?

"Early Invention" என்று ஒன்று 
தேவை என்பதை 
"Early" யாகவே invent செய்த 
இப்பள்ளி 
அரை நூற்றாண்டை நெருங்கி 
ஆதரவு தந்தது !

'அம்மா என்று அழைக்காத 
உயிரில்லையே' என்ற 
வார்த்தை பொய்த்து விடுமோ 
என்று ஏங்கிக் கிடக்கையில் 
மூன்று வயதில் 
"அம்மா! " என்று அந்த 
உயிர் அழைத்தது !
பல அம்மாக்களுக்கு 
அப்போதுதான் 
உயிரே வந்தது !

அப்பிள்ளை -
ஒருவரிப் பாடம் முடித்தது !
ஆத்திச் சூடி மொத்தம் 
முடித்த உணர்வு 
அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
இரு வரிப் பாடம் முடித்தது !
1330 குறள்  அனைத்தும் படித்த  
உணர்வு அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
மூன்று வரிப் பாடம் முத்தாய் முடித்தது !
திரிகடுகம் முற்றும்  முடித்த 
உணர்வு அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
நான்கு வரிப்  பாடம் முடித்தது !
நாலடியாரை நயம்படப்  படித்த 
உணர்வு அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
ஐந்து வரிப்பாடம் முடித்தது !
ஐம்பெருங்காப்பியம் அனைத்தும் 
கரைத்துக் குடித்த உணர்வு 
அத்தாய்க்கு !

மிகைப்படுத்தவில்லை !

அம்மா என்று அழைக்கவே 
அத்தனை காலம் எடுத்த பிள்ளை 
இத்துனை முன்னேற்றம் கண்டால் 
இதை விட வேறென்ன வேண்டும் ?

'கற்றது கை மண்  அளவு' என்பார்கள் !
கை மண்ணை வைத்துக் கூட 
கற்றுக் கொடுக்க முடியும் என்று 
என்றாவது நினைத்திருக்கிறீர்களா ?

நின்றால் பாடம் நடந்தால் பாடம் 
அமர்ந்தால் பாடம் உண்டால் பாடம் 
உறக்கம் பாடம் என்று 
சொல்லப்பட்ட போது 
இது என்ன 
பாடாய் இருக்கிறதே என்று 
முதலில் நினைத்தோர் 
இம்முறை 
வெற்றிப் பாட்டாய் 
ஒலிக்கத் தொடங்கிய பின்தான் 
அதன் 
அருமை உணர்ந்தோர் !

ஒரு  கல்விச் சாலை  செய்தல் 
ஆயிரம் ஆலயம் செய்தலுக்கு ஒப்பாம் !
இங்கோ
ஆயிரமாயிரம் கல்விச்சாலைகளுக்கு 
ஈடு - ஒரு 
பால வித்யாலயா என்றால் 
சற்றும் மிகையல்ல !

உங்கள் பாடங்கள் -
வண்ணங்கள் பற்றி மட்டுமல்ல !
வளர்ச்சியைப் பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் -
வடிவங்கள்  பற்றி மட்டுமல்ல !
விடிவுகளை ப் பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் -
இலக்கங்கள் பற்றி மட்டுமல்ல !
அடைய வேண்டிய 
இலக்குகள்  பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் -
எழுத்துக்கள்  பற்றி மட்டுமல்ல !
மீண்டும் மீண்டும் துவளாமல் 
எழுதுவது  பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் 
வார்த்தைகள் - வாக்கியங்கள் பற்றி மட்டுமல்ல !
வாழ்க்கையைப் பற்றியும்தான் !

நீங்கள் கொடுத்திடும் 
படிப்பினை 
படிப்பு இணை அற்றது !

நீங்கள் காட்டிடும்  
அக்கறை -
எக்கறையும்  இல்லாதது !

நீங்கள் செய்திடும் 
தொண்டு - 
இவ்வுலகம் 
கண்டு இராதது !

'நான் - நாளை 
ஆசிரியையிடம் சொல்லிவிடுவேன்'
என்று 
பிள்ளைகள் 
பெற்றோரைச்  செல்லமாய் 
மிரட்டிப் பார்த்திருக்கிறீர்களா ?
நாங்கள் பார்த்திருக்கிறோம் !

தலைமை ஆசிரியை 
அக்கறையுடன் தவறுகளைச் 
சுட்டிக் காட்டும் போது  
தரை நோக்கிப் 
பயந்து நிற்கும் 
தாய்மாரையும் தந்தைமாரையும் 
கண்டிருக்கிறீர்களா ?
இங்கு காண்பீர்கள் !

விவரம் புரியாத வயதில் 
ஆசிரியரின் உறவை விட 
விவரம் புரிந்த பின் 
விதிவசத்தால் ஏற்பட்ட 
உறவு - வரமாகும் என்பதை 
உணர்ந்தோம் !

தெய்வம் கை விட்டதோ என்று 
மாதாவும் பிதாவும் கை பிசைந்த போது 
கை கொடுக்கத் துணையாய் வந்த 
குரு ! - நீங்கள் 
எந்நாளும் இப்பிள்ளைகட்குத் 
தெய்வத்தின் 
உரு !

ஐந்தில் வளையாதது 
ஐம்பதில் வளையாது என்பர் !
அதுபோல் 
ஐந்தில் கேட்காதது 
ஐம்பதில் கேட்பது கடினமென 
உணர்த்தி 
ஐந்திலேயே அனைத்தும் 
கேட்க வைத்தீர் !

தோளுக்கு மிஞ்சினால் மட்டும் 
தோழன் அல்ல !
தோளில்  சுமக்கும் வயதிலும் கூட 
இப் பிள்ளைகள் 
தோழர்களே என்று 
தொலைநோக்குடன் 
கள்ளமில்லாப் 
பிள்ளை நட்பை 
பிசைந்து அளித்தீர் !

எம் பிள்ளைகள் இன்று 
கேட்பதற்கும் பேசுவதற்கும் 
Hearing Aid ஐ விட 
உங்கள் 
Hearing Aim தான் 
முக்கிய காரணி என்பதை 
நாளும் மறவோம் !

எதுவுமே புரியாமல் 
நச்சரித்த  பிள்ளைகளை 
நயமாய் 
உச்சரிக்கும் பிள்ளைகளாய் 
மாற்றியவர் நீவிர் !

சிறுதுளி பெருவெள்ளம் என்பர் !

மொழிவளம் என்னும் 
பெருவெள்ளச்  சாரத்தை 
சின்னஞ்சிறு காதுகளுக்கு 
ஏற்றார் போல் 
புதியதோர் புனல் கொண்டு 
சிறுதுளியாய் மாற்றிப் 
புகட்டியவர் நீவிர் !

இசைக்கு மொழி தேவையில்லை என்பர் !
எம் பிள்ளைகளின் 
மொழியே எமக்கு இசையென 
ஆன நிகழ்வு 
வெளியார்க்குப் புரியாது !

கடவுளைக் கண்டவர் 
விண்டிலர்;
விண்டவர் 
கண்டிலர் என்பர் !

இங்கோ...

கண்டவர் விண்டுவர்;
விண்டவர் நிச்சயம் கண்டவர்தாம் 
என்றுணர்ந்தோம் !

சேர்ந்து வடம் பிடிக்க 
இந்தத் தேர் 
நகர்கிறது மெதுவாய் ..

இனி 
ராஜ பாட்டையில் 
வேகமெடுக்கும் என்ற 
நம்பிக்கையில் 
பயணம் தொடர்கிறது !

வருங்காலத்தில் 
இப்பிள்ளைகளுக்கு 
வானம் வசப்படட்டும் !
எல்லைகள் - இனி 
இல்லாது போகட்டும் !

கதிரவன் 
விடியலுக்கு வித்திடுவது போல் 
இப்பள்ளி 
விடியலையே 
இறைவனுக்குப் 
படையலாக்கட்டும் !

எதிர்காலத்தில் 
எம் பிள்ளைகள் 
எம்மொழியிலும் பேசும் 
ஒவ்வொரு வார்த்தையும் 
நாளும் உரக்க ஒலிக்கும் 
உமக்கு 
'நன்றி ' என்னும் 
ஒரே பொருளுடன் மட்டும் !

ஆனால் - 
நிச்சயம் 
'நன்றி' என்னும் 
வார்த்தையே 
நாணம் கொள்ளும் 
இச்சேவைக்கு 
நான் - ஈடா? என்று ..

வாழ்க பால வித்யாலயா !
வாழ்க பால வித்யாலயா !

அன்புடன் 

ஈ. . ரா 

(அபிராமி அப்பா )
28-3-2016
9790902334 

Tuesday, July 28, 2015

புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !




எதிர்க்கலாம் என்று எவரும்
நினைக்க முடியாத எங்கள் கலாம்.

நீர்
விதைகளையும் விழுதுகளையும் கோடிக்கணக்கில்
விட்டுச் சென்ற ஆல மரம்..

புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !

இத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் !

 நீர்
விழுந்து விடவில்லை !
விட்டுச் செல்ல மனம் இன்றி
வீற்றிருக்கின்றீர் இதயங்களில் ..

நீர்
தாடி மீசையோ மழுக்கிய தலையோ
தலை மறைப்போ காவியோ வெள்ளுடையோ மட்டும்
கொண்டிராத கொள்கை ஞானி !

மரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்
கன்னத்தில் கை வைத்து புலம்ப மட்டுமே செய்தோம்..
நீரோ
உம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று
செல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் !

நீர்
புலம்பியதே இல்லை ! - ஏனெனில் 
உம் கண்களுக்கு எதிர்காலம் எப்போதுமே புலனானது ! 

நாங்கள் தொலைந்ததையே தேடிக் கொண்டிருந்த போது -
நீர்
தொலைவில் புதிதாய் அதையே கண்டு கொடுத்தீர்!

நீர்
அணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்
அன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்!

எப்பொழுதுமே
உம் புன்னகையின் கவர்ச்சி
முதல் முறை முகம் பார்க்கும் 
குழந்தையின் சிரிப்பைப் போலே
 கள்ளங்கபடமற்றது !

 நீர்
உம் கனவுகளை
மற்றவர் உறக்கத்திலும்
தோன்றச் செய்த
விந்தை விஞ்ஞானி !

அரசியலை நினைத்து நாங்கள் நொந்த போது
நீரோ
இதுதான் இன்றைய 'அரசு இயல்' என்று அதை
இயல்பாக எடுத்துக் கொண்டீர் !

சமூகக் கால்வாய் நாறுகிறதே என்று
நாங்கள் கவலைப்பட்ட போது 
தூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்
காட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி
புது நீராய்ப் பாயும் என்று நீர்
பொறுமையாய் நம்பி இருந்தீர் !

நீர்
நவீன இந்தியாவின் சிற்பி !
உம்மால் மட்டுமே இச்சிலையை வடிக்க முடியாதென
உணர்ந்து
கோடி உளிகளை
குழந்தைகள் கையில் கொடுத்தீர் ! 

உம்மை தந்தை என்றோ மாமா என்றோ
தாத்தா என்றோ நாங்கள் அடையாளம் காட்ட மாட்டோம்!
ஏனெனில்

நீர் எல்லா வயதினருக்கும் தோழனாவீர் !

உம் தலையில் எல்லா தலைமுறைக்கும்
தகவல் தகைந்து கிடந்தது!

அரசன் ஆட்சி செய்ய வேண்டியது
மண்ணை அல்ல மனங்களை என்பதை 
நீர் முற்றிலும் உணர்ந்தவர் !

முடிந்தவன் சாதிக்கிறான்
முடியாதவன் போதிக்கிறான்
என்பது பழமொழி .. ஆனால்
நீரோ 
சாதிக்கவும் செய்தீர்
போதிக்கவும் செய்தீர்..!

நீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது!
எல்லா மதத்தவற்கும் சார்பானவர் !

இன்றுதான் புத்தர் சிரித்தாரோ ? -
நீர் மீண்டும் அவரிடமே வந்து விட்டீர் என்று !!

இன்றுதான் இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ - உம்மை வாரி அரவணைக்க ?

இன்றுதான் இறைவன் சற்றே நகர்ந்து அமர்ந்தாரோ? - 
உமக்கும் இடமளிக்க?

நாங்கள் தவிக்கவில்லை !

நீர் உயர்ந்தவர்- அங்கேயே இரும் !!

மை லார்ட் ! இவர் எங்கள் கட்சிக்காரர் என்று
உலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது!!

இன்றுதான் தேசத்தையே
தேசியக்கொடி மூடியதைப் பார்க்கிறோம் !

உம் இதயம் இந்தியா இந்தியா
என்றே துடித்தது இறுதி வரை !

நீர் பிற நாடுகளையும்
புற நானூற்றைப் பேச வைத்தீர் !

நீர் திரும்பிய இடமெல்லாம்
திருக்குறளை திகட்டாமல் அளித்தீர் !

ஐயா
உம்மை மறத்தமிழன் என்றோ முதல் குடிமகன் என்றோ
ஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ
ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது !

 நீர்
பிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி !

 நீர்
 வழிப்போக்கனாய் மட்டும் வாழாமல் 
செல்லும் வழியெல்லாம் புதிதாய்ச்
 செப்பனிட்டுக் கொண்டே சென்றவர் !

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது !
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் !

நீரோ பேராற்றல் !
நீரின்றி அமையாது உலகு !
நீர் நாங்களாக மாறி விட்டீர் !

உம் பயணத்தைத் தொடரும் -
எம் கனவுகளிலும் செயல்களிலும் !!!

 ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !! ​​

​​​​​​​​​​ உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் ! 9790902334

Monday, November 21, 2011

பதினொரு மாதங்கள் பதினொரு நாட்களுக்குப் பின்



பதினொரு மாதங்கள்
பதினொரு நாட்களுக்குப் பின்..
இந்தப்
பதியனில்
பதிக்கும் முயற்சி

இம்முறை
தொடர்ந்து
மலர வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு
உள்ளுக்குள்

காலச் சூழ்நிலையும்
காலன் நிகழ்த்திய
பேய்க் காற்றும்
ஓய்ந்து விட்டதுபோல்
ஓர் உணர்வு

தாழ் விலக்கி
வெளிவர
கதவருகில் துடிக்கும்
கனவுகள்

என்னத்தாலோ
கட்டுப்படுத்தப்பட்ட
சுருக்கு நெகிழ்ந்த
எண்ணத் தாள்கள்

துளிர்க்கத்
துடிக்கும்
தூரிகை முனை

இறைவா
இது தொடர்ந்திட
துணையாய்
தொடர்ந்திடு.

படம் : இணையத்திலிருந்து