Thursday, July 29, 2010

எரிமலையை எட்ட நின்று பார்க்கலாம், ஏற முடியுமா ?


ஏதாவது பெயர் வேண்டுமென
ஆசைப்பட்டால்
அதற்குப் பெயர்
பெயர் ஆசை..!
சூப்பர் ஸ்டார் பெயர்
வேண்டுமென்றால்
அதற்குப் பெயர்
பேராசை என்று
இப்போது
தெரிந்திருக்கும் - பலருக்கு !

இனி
எந்திரனின்
சாதனைகளுக்கு முன்
வாலாட்ட யாரும்
எந்திரிக்கவே முடியாது..!

பணம் போட்டவர்களை
போண்டியாக்கும்
பாப்பர் ஸ்டார்களுக்கு
மத்தியில்
இந்த தங்க மகன்
மட்டும்தான்
நிஜமான
சூப்பர் ஸ்டார் !

பட்டையைக் கிளப்புற பட்டம்
படையப்பனுக்கு மட்டும்தான்..!
அவர் வேண்டுமானால்
அதை
சட்டை போல
கழட்டிப் போடலாம்!
அது அந்த
மனிதனின் பெருந்தன்மை !

அதை
மற்றவர்கள் பார்க்கலாம்..
அணிந்து கொள்ள முடியாது !
அப்படி முயன்றால்
அதற்குப் பெயர்
சட்டை அல்ல
சேட்டை !...

சூப்பர் ஸ்டார் என்பது
நடிப்பினால் வந்ததல்ல !
அது
வாழும் முறையின்
படிப்பினால் வந்தது..!
பல முறை
பல பேரின்
பொறாமைத் தீயினால்
வெந்தது..!

அவர்
கட்டாந்தரையில்
துண்டை விரித்துப் படுப்பார்..!
வாங்கிய காசுக்கு
தன்னையே பொரித்துக் கொடுப்பார்..!

அவர்
அசதிகள் மறைய
வசதிகள் கேட்பதில்லை !
வசதிகள் வந்தும் - பழைய
வாழ்வை மறப்பதில்லை !

அவருக்கு
தூக்கம் வரும்
மரத்தடியில் !
ஏனென்றால் -
துக்கம் இல்லை
அவர்
மனத்தடியில் !

அவருக்கு
தூக்கம் வரும்
தெருவோரத்திலும்!
ஏனென்றால் -
ஏக்கம் அவரிடம்
இல்லை
ஒரு ஓரத்திலும் !

அவர்
என்றைக்கும்
நினைக்காத வார்த்தை
நான் !
அதனால்தான் அவர்
இன்றைக்கும்
உண்மையான
டான் !

அவருக்கு
ஒரே ஒருவன்தான் முதலாளி !
ஆனாலும்
இன்றைக்கும் அவர்
எழுந்து நிற்பார் -
பணம் போட்ட மனிதனைப்
பார்த்து..!

குருநாதர்களைப்
பார்க்கையில் -
அவர் கண்கள்
பாதங்கள் தேடும்..!
கூட்டங்கள்
புகழ்கையில் -
அவர் கால்கள்
இமயத்திற்கு ஓடும் !

அவர் ஒரு
கடினமான பாதையை
மற்றவர்களுக்காக
ராஜபாட்டையாக்கிக்
கொடுத்திருக்கிறார். !

தனிமனிதனாக
தனி வழிகளை
உருவாக்கித் தந்திருக்கிறார் !

அந்த சாலையின் நிழலில்
வேண்டுமானால்
சொகுசாக உங்கள்
பயணங்களைத்
தொடருங்கள் !
அல்லது புதிதாய் ஏதேனும்
பாதையைக் காணுங்கள்..!

அதை விடுத்து
நன்றி மறந்து
பள்ளம் தோண்டாதீர்கள்..!
தோண்டினால்
நீங்கள் வெட்டிய குழியில்
நீங்களே விழுவீர்கள் !
எதிர்காலம் உங்களை
ஏளனப்படுத்தும்..!

உலக அரங்கில்
தமிழ்த்திரையை
திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர் !
அவர் முதுகிலேயே
சவாரி செய்து விட்டு
பச்சைக் குதிரை விளையாடலாம் என்று
நினைக்காதீர்கள்..!

அவர்
பச்சைக் குதிரை அல்ல
போர்க்குதிரை !
ஒரு முறை சிலிர்த்தால்
சிதறிப் போவீர்கள் !

ரஜினியின் காலத்தில்
சக கலைஞனாக இருப்பதில்
பெருமைப்படுங்கள் !
சம கலைஞனாகி விடலாம் என்று
கனவு காணாதீர்கள்..!
ஏனெனில் ரஜினி ஒரு
சரித்திரம்!


எரிமலையை எங்கிருந்தோ பார்க்கலாம்.
ஏறி நின்று பார்க்கலாமா?
சூரியனை எட்டிப் பார்க்கலாம்..
எட்டிப் பிடிக்க நினைக்கலாமா?


சிறு பிள்ளைகளே !
உங்கள் தந்தை காலம் முதல்
உங்கள் பிள்ளைகள் காலம் வரை
இன்றைக்கும் அவருக்கு
இரண்டாம் இடம் என்றால்
என்னவென்றே தெரியாது!
அவருக்கு நீங்கள்
மாற்று என்றால்
பாவம் நீங்கள் -
மன நலம் குன்றியவர்கள்தான்!

ஆசைப்பட்டு ஆசைப்பட்டு
தூக்கத்தை தொலைக்காதீர்கள் !
இனியாவது நிம்மதியாய்த்
தூங்குங்கள் ! - நாளை
எழுந்திருக்கும்போது
நீங்களே நீங்களாய்ச்
சுயமாய் நடங்கள் !
இல்லையேல்
உங்களுக்கு
தூக்கத்தில் நடக்கிற வியாதி என்று
தூற்றப் போகிறார்கள்...!


படம் : நன்றி : சிம்பிள் சுந்தர்

Wednesday, July 7, 2010

என் அபிக்கு ஒரு தாலாட்டு


உன் பாதங்களின்
சுத்தச் சிவப்பால் நாணிய
காலைச்சூரியன் - உன்னை
மேகங்களூடே
ஒளிந்து பார்க்கிறான் !

தன்னைக்காட்டி
உனக்கு அமுதூட்டும் நாள்
விரைவில் வர ஏங்கி தன்னை
அழகுபடுத்திக்கொண்டு
வீட்டு மாடத்தில்
பவுர்ணமிச் சந்திரன்
தவமாய்க் கிடக்கிறான் !

உன் பொக்கை வாயில்
பற்கள் முளைக்கும் வரைதான்
தங்கள் பந்தா என்று
விண்மீன்கள் எல்லாம்
இப்பொழுதே
மின்னிக்கொள்கின்றன !


உனக்கு கதகதப்பாய்
இருக்கவேண்டும் என்பதற்காகவே
தென்மேற்குக் காற்று மேலெழும்பி
லேசாய் கதிரவனைத்
தொட்டுத் திரும்புகிறது...!

உனக்கு அடைமழை பிடிக்காது என்பதால்
முகில்கள் எல்லாம் சல்லடையாகி
வானத்து நீரை மெலிதாய்
வடிகட்டி
இளம்சாரலாய்த் தருகின்றன !

நீ தூக்கத்தில் சிரிக்கையில்
கண்ணன் பூ காட்டுவதாக
பாட்டி சொன்னாள்! -
எனக்கென்னவோ
பதியனில் இருக்கும்
அரும்புகள் எல்லாம்
உன்னைப் பார்த்து
சிரிக்கவே மலர்வது போல்
தோன்றுகிறது..!

நீ சேட்டை செய்கையில்
அத்தை அல்லிப்பூ செண்டாலோ
மாமன் மல்லிப்பூ செண்டாலோ
அடிப்பதில்லை..
ஏனென்றால்
இவள் எங்கள் கூட்டம்
என்று
அல்லிகளும் மல்லிகளும்
குழைந்து நிற்கின்றன !

நீ சிணுங்கும் நேரம்
சில்வண்டுகள் தம்
ரீங்காரத்தை
நிறுத்துகின்றன..!

நீ செல்லமாய்
அடம்பிடிக்கையில்
பறவைகள்
சிறகடிக்காமல்
பதைபதைக்கின்றன !

என் பிரியமானவளே!

இவர்கள் பாவம்..
தம் வேலையைப் பார்க்கட்டும் -
நீ சமர்த்தாய்க்
கண்ணுறங்கு...!
கண்ணுறங்கு !



ஈ. ரா

(இறைவன் அருளால் 19-06-2010 அன்று எனக்கு பெண் குழ்ந்தை பிறந்துள்ளது..தாயும் சேயும் நலம்.. )

(படம் இணையத்திலிருந்து )