Saturday, June 6, 2009

"குழல் கொடுமை - யாழ் கொடுமை"















குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்
தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்!

ஆண்மை இருக்கும் இறையே -
இனியாவது நாங்கள்
இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்!

அன்றோ ஒரு காலம் உண்டு!
வனம் எல்லாம் வனப்புடனே நின்று!
இன்றும் ஒரு ஞாலம் உண்டு
இனம் மரிக்கக் காணாமல் கண்டு!

ஒன்பதுதான் கிடைத்தது - இனி
ஓய்வெடுக்கப் போகலாம்!
இருபத்தெட்டு கிடைத்தது - இனி
இலாக்காக்கள் கேட்கலாம்!
ஒன்றுமே கிடைக்கவில்லை - இனி
ஒப்பாரி வைக்க வேண்டாம்!
தனியாகவே வந்துவிட்டோம்- இனி
தமிழாவது மண்ணாவது?

பாவிகளா -
ஆதிமனிதனைப் போல்
அர்த்தமில்லா ஊளையோடே
இருந்து இருக்கலாம்!

பாழாய்ப்போன மொழியை நம்பாத
ஊமை சகோதரர்களே
உண்மையிலேயே உங்களைப்
பார்த்துப் பொறாமைப் படுகிறோம்!

நாங்கள் இப்போதெல்லாம்
வருத்தப்பட்டு பாரம் சுமப்பது இல்லை!
உயிரும், உற்றார் உடல்களும்
என்றைக்காவது பாரமாகுமா என்ன?

நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்று நினைப்பது இல்லை! - ஒருவேளை
ஏதாவது நன்றாகவே நடந்தாலும்
அதைப் பார்ப்பதற்கு நாங்கள்
இருக்கப் போவதுமில்லை!

நாங்கள் இப்போதெல்லாம்
மேற்கு நோக்கி புனிதம் தேடி
யாத்திரிப்பதில்லை! - ஏனெனில்
எங்கள் வழி நெடுகிலும்
மனிதம் மண்ணுக்கு உள்ளேதான்
மலையாகக் கிடக்கிறது!

அழுத பிள்ளை பால் குடிக்குமாம்
உங்கள் ஊரில்! - இங்கோ
குழந்தைகள் அழுவது -
அம்மா நான் உயிரோடு இருக்கிறேன்
என்று உணர்த்திடவே!

பல நூறு ஆண்டுகள் முன்
போரிலே வென்ற மன்னர்
பகை நாட்டின் வயல் அழித்து
வெள்ளெருக்கும் ஆமணக்கும்
விதை விதைத்து - கோவேறு
கழுதைகளால் உழுதிட்டு
கடுஞ்சினத்தை தீர்ப்பனராம்!

இன்றும் பாவி மக்கள்
போரென்ற பேரினிலே
பார் முழுக்கப் பார்த்திடவே
இரு நாட்டின் இனம் அழித்து
ஈயத்தை இதயத்தில்
விதை விதைத்து - ஈனப்
பன்றிகளால் உழுதிட்டு
உயிர் அறுவடை செய்கின்றார்!

வாழ்க உங்கள்
விஞ்ஞான விவசாயம்!
வளர்க உங்கள்
நவீன யுகப் புரட்சி!

சங்க காலம் தொட்டு வரும்
சண்டை காலம் முடியவில்லை!
எங்க காலம் போயாச்சு! - எம்
பிள்ளையாச்சும் பிழைக்குமா?

எங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு
அற்ப மகிழ்ச்சி! -
இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!


---
அன்பு இல்லாத

ஈ ரா

6 comments:

Vaanathin Keezhe... said...

நண்பர் ஈரா...

நல்ல கவிதை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த முடியவில்லை, இழப்பை நல்ல இழப்பு என்று சொல்வது போலாகிவிடும் என்பதால்.

ஆனால் மனதைப் பிழிகிற வார்த்தைகள்.

என்றைக்காவது இந்த சகோதரர்கள் நிலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையைச் சிதைக்க எத்தனை நாடுகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன பாருங்கள்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

இந்த இனத்தின் அவலத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். அதன் மூலமாவது ஒரு விடிவு பிறக்குமா என்று பார்ப்போம்!

-வினோ
என்வழி.காம்

Anonymous said...

super.great writing

suresh

கிரி said...

//இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!//

ஈரா இதை படிக்கும் போதே மனது வருத்தமாக உள்ளது.

எத்தனை மக்கள் எத்தனை ஆசைகள் எத்தனை கனவுகள் ..தற்போது அனைத்து ஒரு கம்பி வலைகளுக்குள்ளே

உலகமே இவர்களை புறக்கணித்து விட்டது தான் மனதை அறுக்கும் விசயமாக உள்ளது.

பிரிட்டன் பிரான்ஸ் கனடா நாடுகள் காட்டும் அக்கறை கூட நம் ஆசிய நாடுகளுக்கு இல்லையே எனும் போது ...கூற ஒன்றுமில்லை....:-(

ஈ ரா said...

வருகைக்கு நன்றி
வினோ , சுரேஷ் , கிரி...

/தொடர்ந்து நிறைய எழுதுங்கள்./

நிச்சயம் இனி எழுதுவேன்..

/ பிரிட்டன் பிரான்ஸ் கனடா நாடுகள் காட்டும் அக்கறை கூட நம் ஆசிய நாடுகளுக்கு இல்லையே எனும் போது ...கூற ஒன்றுமில்லை....:-(/

ஒரு நாடு வல்லரசாக இருந்தால் பக்கத்து நாடுகள் அதைப் பார்த்து மிரள வேண்டும்...நமக்கோ எட்டுப்பக்கமும் எட்டி உதை...எங்கே போவது...

பார்ப்போம் என்றாவது விடியாதா என்று...

ஈ ரா

Shankar said...

ராம்ஸ்.. நெஞ்சை உருக்கும் வார்த்தைப் பிரயோகம். இந்தியப் பெருங்கடலின் முத்தான தேசத்தில் , ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத ஈழத்தில் இன்றோ, உணவின்றி , ரத்த சகதியில் வாழும்(அழியும்) தமிழினம். நம்மூரிலோ பதவிக்கு சண்டை. விடியுமா?

வெண்ணிற இரவுகள்....! said...

நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்று நினைப்பது இல்லை! - ஒருவேளை
ஏதாவது நன்றாகவே நடந்தாலும்
அதைப் பார்ப்பதற்கு நாங்கள்
இருக்கப் போவதுமில்லை!

இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!

நெஞ்சை உலுக்கிய பதிவு

Post a Comment