Wednesday, October 21, 2009

ஆசைப்படுங்கள் !


ஆசைப்பட
ஆசைப்படுங்கள் !
அன்புக்கு
ஆசைப்படுங்கள் !

நல்லவை
அனைத்திற்கும்
ஆசைப்படுங்கள்
நமக்கெனவே
எல்லாம் என
ஆசைப்படுங்கள்!

ஆசையின்றி
எதுவும் இங்கே
அசைவதில்லை!
ஆம் !
கருவிழியைக் காக்கும்
ஆசையே
கண்ணிமையின்
அசைவு!
காற்று - மரங்களின்
இல்லற ஆசையே
இலைகளின்
அசைவு!

ஆசைப்படாமல்
எதுவும் கிடைப்பதில்லை!
அப்படிக் கிடைத்தால் அது
என்றும் நிலைப்பதில்லை !

கற்றுக் கொள்ள
ஆசைப்படுங்கள்!- பின்னர்
கற்றதைக் கொடுக்க
ஆசைப்படுங்கள் !

நிலைத்து நிற்க
ஆசைப்படுங்கள்
நிலையாமையே நிலையென
நினைத்திருக்கவும்
ஆசைப்படுங்கள் !

குறிக்கோள்களை
குன்றுகளாளாய்க் குறுக்கிடாமல்
சிகரங்களை
சீக்கிரம் தொட ஆசைப்படுங்கள்!

குனிந்த தலைக்கும்
கூன் முதுகிற்கும்
விடைகொடுத்து
நிமிர்ந்த நெஞ்சுக்கும்
நேர்மைக்கும் ஆசைப்படுங்கள் !

சலிப்புக்களைச்
சாகடிக்கச் செய்து விட்டு
பிரமிப்புக்களுக்குப்
பிறப்பளிக்க ஆசைப்படுங்கள்!

தாயின் கருணைக்கு
ஆசைப்படுங்கள் !
தவழும் மழலையின்
தமிழ் கேட்க ஆசைப்படுங்கள்!

இளமையில் முயற்சிக்கு
ஆசைப்படுங்கள்!
முதுமையில் முதிர்ச்சிக்கு
ஆசைப்படுங்கள் !

வெற்றியின் ருசிகாண
தோல்விக்கு ஆசைப்படுங்கள்!
தோல்வியின் வலி மறைய
வெற்றிக்கு ஆசைப்படுங்கள் !

விடை காண முடியா
வினாக்களுக்கு ஆசைப்படுங்கள்
வினாக்கள் அனைத்திற்கும்
விடைகாண ஆசைப்படுங்கள்!

பிராணிகள் காட்டும்
பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்
பிறவிகளில் ஒன்று
அவையாக ஆசைப்படுங்கள்!

காதலுக்கு
ஆசைப்படுங்கள் !
காதலித்தால்
காத்திருக்க ஆசைப்படுங்கள் !

16 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//இளமையில் முயற்சிக்கு
ஆசைப்படுங்கள்! //

கரீக்ட்டு...

ஆசையோட நிப்பாட்டிடாதீங்கப்பா..

க.பாலாசி said...

//கருவிழியைக் காக்கும்
ஆசையே
கண்ணிமையின்
அசைவு! //

அழகான வரிகள்...

ஆசைகளை விதையாய்த் தூவி விதைத்த க‘விதை’ நன்றாய் வளர்ந்திருக்கிறது.

Anonymous said...

காதலிக்கு காத்திருந்தால் நடுத்தெருவுலதான் நிற்கணும்

லிங்கம்

ராமலக்ஷ்மி said...

ஆசைப்படச் சொன்ன அத்தனையும் அருமை.

//விடை காண முடியா
வினாக்களுக்கு ஆசைப்படுங்கள்
வினாக்கள் அனைத்திற்கும்
விடைகாண ஆசைப்படுங்கள்!//

அருமை ஈ ரா!

//பிராணிகள் காட்டும்
பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்
பிறவிகளில் ஒன்று
அவையாக ஆசைப்படுங்கள்!//

சுவாரஸ்யமான ஆசைதான்:)!

கடைசி பத்தியும் அழகு:))!

ஈ ரா said...

பிரியமுடன்...வசந்த் said...
//கரீக்ட்டு...

ஆசையோட நிப்பாட்டிடாதீங்கப்பா..//

கரீக்டுதான் தலைவா..

//க.பாலாசி said...

ஆசைகளை விதையாய்த் தூவி விதைத்த க‘விதை’ நன்றாய் வளர்ந்திருக்கிறது.//

அப்பப்போ வந்து தண்ணி ஊற்றுங்கன்னே...

//காதலிக்கு காத்திருந்தால் நடுத்தெருவுலதான் நிற்கணும்

லிங்கம்//

--)

//ராமலக்ஷ்மி said...

பிராணிகள் காட்டும்
பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்
பிறவிகளில் ஒன்று
அவையாக ஆசைப்படுங்கள்!//

சுவாரஸ்யமான ஆசைதான்:)!//

பல நேரம் நான் இதை யோசிப்பேன் சகோதரி...வஞ்சம் இல்லா உலகம்..

//கடைசி பத்தியும் அழகு:))!//

நன்றி

snkm said...

ஆசை மட்டுமே நம்மை முயற்சியை நோக்கி அழைத்து செல்லும்! நன்றி!

vasu balaji said...

இப்போதைக்கு இந்த மாதிரி உருப்படியா அழகா எழுத ஆசைப்பட்டுக்கறேன். நல்லா வந்திருக்கு ஈ.ரா.

கிரி said...

உங்க ஆசை எல்லாம் நியாயமான ஆசை தான்.. அதனால் ஆசைப்படுவதில் தவறில்லை :-)

ஈ ரா said...

//snkm said...
ஆசை மட்டுமே நம்மை முயற்சியை நோக்கி அழைத்து செல்லும்! நன்றி!//

நன்றி சார்..

//வானம்பாடிகள் said...
இப்போதைக்கு இந்த மாதிரி உருப்படியா அழகா எழுத ஆசைப்பட்டுக்கறேன். நல்லா வந்திருக்கு ஈ.ரா.//

ஐயா உங்க தளத்துல பல வெரைட்டியா அமர்க்களம் பண்ணிட்டு இங்க அடக்கமா பின்ன்னூட்டம் போடறீங்க...

நன்றி...


//கிரி said...
உங்க ஆசை எல்லாம் நியாயமான ஆசை தான்.. அதனால் ஆசைப்படுவதில் தவறில்லை :-)
//

நன்றி ஜி, என்ன ரொம்ப பிசியா... ஆளையே காணும்... ஒருவேளை மு(ந்தின)த்த பதிவையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி வராமப் போயிட்டீங்களோன்னு நினைச்சேன்..

கலகலப்ரியா said...

எளிய.. அரிய.. வரிகள்...
மிக நன்று.. ஈ ரா..

R.Gopi said...

ஆசை ப‌ற்றி ந‌ண்ப‌ர் ஈ.ரா.சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் அனைத்து அருமை...

ஆத‌லால், ம‌க்க‌ளே அனைத்திற்கும் ஆசைப்ப‌டுவீர்...

இதுபோல் நீங்க‌ள் தொடர்ந்து எழுதுவ‌தால், உங்க‌ள் எழுத்தை ப‌டிக்க‌வும் ஆசை கூடுகிற‌து...

சர்வேசன் கதைப்போட்டிக்கு கதை எழுதி விட்டீர்களா??

சிங்கக்குட்டி said...

//காதலுக்கு ஆசைப்படுங்கள் ! காதலித்தால் காத்திருக்க ஆசைப்படுங்கள்!//

உண்மை உண்மை ஈ ரா.

சண்டை போடவும் தயாராய் இருங்கள்...

எல்லாம் பண்ணி நாளையோட மூணு வருசமாச்சு, வாழ்கை இப்போ இனிமை இனிமை...:-)

ஈ ரா said...

//கலகலப்ரியா said...

எளிய.. அரிய.. வரிகள்...
மிக நன்று.. ஈ ரா..//

நன்றி ப்ரியா...

//R.Gopi said...

ஆசை ப‌ற்றி ந‌ண்ப‌ர் ஈ.ரா.சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் அனைத்து அருமை...
//
உங்கள் தொடர் ஊக்கத்துக்கு நன்றி ஜி...

சர்வேசன் கதைப்போட்டிக்கு கதை எழுதி விட்டீர்களா??

இல்ல ஜி, இனிமேதான்... தேதியை நீட்டிதிருக்கிறார்கள் அல்லவா... (அப்புறம் நான் முதல் முறையா இணைய போட்டிகளில் கலந்துகொள்வதால், இன்னும் செட் ஆகவில்லை )

//சிங்கக்குட்டி said...
சண்டை போடவும் தயாராய் இருங்கள்...//

அதுக்கும் ஒரு ஆசைப்பட்டா போச்சு..

//எல்லாம் பண்ணி நாளையோட மூணு வருசமாச்சு, வாழ்கை இப்போ இனிமை இனிமை...:-)//

இந்த இனிமை இளமையாய் என்றும் தொடர வாழ்த்துக்கள் தோழரே..

தமிழ் அமுதன் said...

ஆசையில்லாதவன் அரை மனிதன் ...!
ஆசையே எல்லா இன்பத்திற்கும் அடிப்படை காரணம் ..!


ஆசைப்படு ..! அழகிய கவிதை ..!

thiyaa said...

கடைசிப் பத்தி அழகாக உள்ளது
நல்ல வரிகள்

//
காத்திருக்க ஆசைப்படுங்கள்
//

இது சூப்பர்

ஈ ரா said...

Nandri jeevan, nandri Thiyaa

Post a Comment